உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

பிள்ளைகளின் பிரதேசம்

பிள்ளைகளின் பிரதேசம்
இசாக்

நீ
இப்போது
பேசத்தொடங்கியிருக்கிறாய்
அது
உனக்கான மொழியாக ஒலிக்கிறது.

எங்கள்
பயிற்றுவிப்புகளுக்கு
இப்போது
உன்னிடம் அங்கீகாரமில்லை
நீ
நினைத்ததையே
உன் குரலில் பதிவு செய்கிறாய்

எல்லாவற்றுக்கும்
புதிய சொற்களை
பயன்படுத்தி சிரிக்கிறாய்
எங்கள்
விருப்பத்திற்கு
மொழிபெயர்த்து
மகிழ்ந்துக்கொள்கிறோம்.
@

சூரியன்
மறைந்தும் மறையாத
அடர்பகல் பொழுதின்
மென்தூறல்
இரசித்தல் அழகு
எழுந்து
நடைபயில தொடங்கியிருக்கும்
குழந்தை
உறங்கும் தருணங்களில்
@

உனக்கு
ஊட்டுவதற்காக
பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட
உணவை
உன்னைக்கடந்து செல்கிற
கோழிக்கும்
அமர்ந்து பறக்கும் காகத்திற்கும்
அள்ளி இரைத்து விளையாடுகிறாய்
அவற்றை
விரட்டமுனையும்
என்னைப்பார்த்து புன்னகைத்தபடி
@

தலையணையை
பொம்மைக்கு வைத்துவிட்டு
தரையில் தலைவைத்து
உறங்கிவிடுகிற
உன் காலத்தை
அறியாப்பருவம் என
அறிமுகப்படுத்தியுள்ளனர்
என் முன்னோர்
@

எங்களுக்குப் பழக்கப்பட்டவற்றை
உன்
உலகத்துக்குள்
திணிப்பதையே கடமையாக கருதுகிறோம்
எங்கள் கவனத்துள்
அகப்படாத அற்புதம்
உன் உலகமென்பதை புறக்கணித்தபடி
@

சிறை பற்றியான
புரிதல்களும்
இலக்கணங்களும்
அவரவர் உலகத்திற்கேற்ப மாறலாம்
குழந்தைகளின்
உலகத்தில்
வீடு சிறையாகியிருக்கலாம்
@

நன்றி : கணையாழி நவம்பர் 2011