உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

விலகல்

விலகல்

சவூதியோ துபாய்யோ
தூரதேசத்தில் இருப்பது
கூடுதல் தகுதியாகிப் போனது
மாப்பிள்ளையாகிறவனுக்கு.

துபாய்காரனென்பதற்காக
முகம் பார்க்காமலே
கை பிடிக்க துணிந்தவள்
கனவிலும் நினைத்திருக்கமாட்டாள்
தூரதேசத்திலிருந்துக் கொண்டே
துரத்தியடிப்பான்
தாய்வீட்டிற்கு என்றும்,
இரவில் அறிமுகமானவன்
இரவையே அறிமுகப்படுத்துவான் என்றும்.

தொலைபேசியிலேயே
வாழ கற்றுக்கொண்டவர்கள்
பேசி தீர்க்க வேண்டிய பிரச்சினைக்கும்
தொலைபேசியில்
வாழ்க்கையை
முடித்துக்கொள்ளவும்
பழக்கிக்கொண்டார்கள்.

‘தலாக்’
தீர்வா.. தண்டனையா..?
விடுதலையா.. வேதனையா?