உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

சந்தி

துபாய்
சபகா சாலையின் நெரிசலில் நுழைந்து
பயணிக்கையில்
தூரத்திலிருந்து
பார்க்கும் பார்வையில்
தீவிர தேடலுக்குப் பின் கிடைத்துவிட்ட
தோழனைக் காணும்
கனிவு.

நெருங்கிய நிமிடத்தில்
அன்புருக
விசாரிக்கும் விசாரிப்பில்
நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்த
உயிர்
உறவின்
குழைவு.

இப்படியான
அறிமுகத்திற்கு பின்னும்
விலகிச் செல்லாமலோ
கோபப்படாமலோ இருக்க முடிவதில்லை
அவனிடம்

நாகூசாமல்
'சின்னவயசு பொண்ணு..
வேணுமா..?' என்கிற போது.