உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

அழிந்த சொற்களும் ஆயிரம் பொருள்களும்

நீண்ட நாட்களுக்குப்பின்
உன் கடிதம் கிடைக்கப் பெற்றேன்
நேற்று.
பக்கமெல்லாம்
என்றோ அறிமுகமான சொற்கள்
ஒவ்வொரு சொல்லும்
யார் யாரையோ நினைவூட்டுகின்றன.

நலவிசாரிப்புகள்
அறிவுரைகள்
உடல்நல ஆலோசனைகள்
இன்னும் என்னென்னவோ
எல்லாமும் எழுதியிருந்தீர்கள்
எல்லோரையும் போல.

ஆயினும்..ஆயினும்
அம்மா
உன்
கண்ணீர் துளிகள் பட்டுப்பட்டு
அழிந்திருந்த சொற்கள்
புதுப்புது
பொருள்களைச்
சொல்லிக்கொண்டிருகின்றன எனக்கு.