உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.ரசூல் கம்ஸதோவ்

தாடி

நபிவழியில்
வளர்ந்திருக்கலாமென்று
நினைத்துக் கொள்பவர்களுமுண்டு
நான் முஸ்லிமாகயிருப்பதால்
அப்படியெதுவும் அப்போது தோன்றியதில்லை
எனக்கு.

காதல் தோல்வியோயென
சந்தேகித்தவர்களில்
கேட்டுவிட்டவர்களும் உண்டு
காதல் கவிதைகள் எழுதியிருக்கிறேனென்பதால்
சோம்பேறித்தனம்
காரணமென்று சொன்னாலும்
நம்பியவர்கள் தான் நம்பினர்.

திருமண பேச்சின் போது
'தாடியோடு
பெண் ரசிக்கமாட்டாள் மழித்துவிடு'
நண்பர்களின் ஆலோசனைகளையும்
தெளிவான
காரணமெதுவுமற்று
மறுத்திருக்கிறேன்.

இன்னும்
இருக்கத்தான் செய்கிறதென் தாடி
மனைவி
ரசிக்கிறாள்
என்பது இப்போதைய காரணமாகினாலும்
நாளை
இதுவே என் அடையாளமென்பது
காரணமாகலாம்.